திருப்பரங்குன்றம், பிப்.21: நான்கு வழிச்சாலையின் நடுவில் உள்ள செடிகள் மற்றும் புற்களால் தீ விபத்து ஏற்படும் என்று பிப்.18ம் தேதி தினகரன் நாளிதழ் சுட்டிக்காட்டியதை போலவே, திருப்பரங்குன்றம் அருகே தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
மதுரை நான்கு வழிச்சாலையில் சாலையின் நடுவே டுவே இருபுறமும் ஏராளமான அளவில் அரளிச்செடிகள் வளர்க்கப்படுகின்றன. இரவு நேரத்தில் எதிரும், புதிருமாக வரும் வாகனங்களின் ஒளியிலிருந்து காக்கும் வகையில் அரளிச்செடிகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பராமரித்து வருகிறது. அரளிச் செடிகளுக்கு ஊற்றப்படும் தண்ணீரால் செடிகளையொட்டி அதிகளவில் புற்கள் முளைத்து வருகின்றன. தற்போது கோடைகாலம் துவங்கியுள்ள நிலையில் அரளிச்செடிகளுக்கு இடையே வளர்ந்த புற்கள் வெப்பத்தின் தாக்கம் தாங்காமல் கருகி வருகின்றன. எனவே, இந்த புற்களால் தீ விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாக பிப்.18ம் தேதி தினகரன் நாளிதழ் சுட்டிக்காட்டியது. அது தற்போது உண்ைமயாகியுள்ளது. மதுரை திருப்பரங்குன்றம் அருகில் கன்னியாகுமாரி, பெங்களூரு செல்லும் நான்கு வழிச்சாலை உள்ளது. இந்த சாலையின் நடுவே பூச்செடிகள் உள்ள இடத்தில் புற்கள் அதிகளவில் வளர்ந்துள்ளது. சாலையின் நடுவில் மற்றும் சாலையோரங்களில் வளரும் புற்கள் மற்றும் முட்செடிகளை அவ்வப்போது நெடுஞ்சாலை துறையினர் அகற்றுவது வழக்கம். ஆனால், கடந்த சில மாதஙகளாக இப்பகுதியில் உள்ள புற்கள் மற்றும் முட்செடிகளை நெடுஞ்சாலைதுறை அகற்றவில்லை.