அலுவலக உதவியாளர் பணிக்கு குவிந்த பி.இ, எம்பிஏ பட்டதாரிகள் தேர்வு அதிகாரிகள் அதிர்ச்சி

மதுரை, பிப். 21:   காலியாக உள்ள அலுவலக உதவியாளர், காவலர் பணியிடத்துக்கு பி.இ. எம்பிஏ படித்த பட்டதாரிகள் நேர்முக தேர்வுக்கு அதிக அளவில் கலந்து கொண்டது, தேர்வு அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.  

 மதுரை கலெக்டர் அலுவலகத்தில் காலியாக உள்ள ஒரு அலுவலக உதவியாளர் 3 காவலர் என 4 பணியிடத்துக்கு ஆட்கள் நியமிக்க போவதாக கடந்த 2 மாதத்திற்கு முன்பே விண்ணப்பம் வரவேற்கப்பட்டது. இப்பணியிடத்திற்கு மொத்தம் 810 விண்ணப்பங்கள் வந்தன. இவர்கள் அனைவரும் நேர்முகத் தேர்வுக்கு வரும்படி அழைக்கப்பட்டனர். இவர்களுக்கான நேர்முகத்தேர்வு நேற்று நடந்தது. இதில், நேர்முக தேர்வும், சான்றிதழ் சரிபார்ப்பு பணியும் நடந்தது. 5 சப்-கலெக்டர்கள் தலைமையில் ஐந்து குழுவினர் நேர்முகத் தேர்வை நடத்தினர்.   தேர்வில் பங்கேற்றவர்கள் பெரும்பாலும், பி.இ, எம்.பி.ஏ, பட்டப்படிப்பு, படித்தவர்கள் மட்டும் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அதிக படிப்பு படித்தவர்கள் நேர்முக தேர்வுக்கு வந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த பணியிடத்துக்கும் 10ம் வகுப்பு படித்திருந்தால் போதும். இதற்கு பட்ட மேல்படிப்பு படித்தவர்கள் பங்கேற்றதை கண்டு வேதனை அடைந்தனர்.

இதுதொடர்பாக லதா என்ற பெண் கூறுகையில், ‘‘பட்ட மேல்படிப்பு படித்துள்ளேன். மத்திய அரசின் ரயில்வேயில் ஒரு லட்சம் வேலை காலியாக இருப்பதாக அறிவித்தது. அதற்கு விண்ணப்பித்தேன். ஓன்றரை ஆண்டுகளாகியும் இன்னும் தேர்வு நடத்தப்படவில்லை. அதேபோன்று, மத்திய அரசின் எஸ்.எஸ்.சி, தேர்வுக்கு விண்ணப்பித்து, ஓரு ஆண்டுகளுக்கு மேலாகிறது. இன்னும் போட்டி தேர்வு நடத்தப்படவில்லை. தற்போது, மத்திய, மாநில அரசுகள் போட்டித் தேர்வுகள் நடத்துவது குறைத்து வருகிறது. வேலை செய்ய வேண்டும் என்பதற்காக அரசு வேலை ஏதுவானாலும் பரவாயில்லை என கூறி அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தேன். இதிலும்  அதிக கல்வித் தகுதி எனக்கூறி நிராகரிக்கின்றனர்’’ என்றார்.

Related Stories: