புதுச்சேரி, பிப். 21: புதுச்சேரியில் போலீசார் 2வது நாளாக நடத்திய அதிரடி சோதனையில் பள்ளி, கல்லூரி அருகே புகையிலை பொருட்கள் விற்ற 13 பேர் கைது செய்யப்பட்டனர்.பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் இருக்கும் இடத்தில் இருந்து 100 அடி தொலைவுக்குள் பீடி, சிகரெட் மற்றும் தடை செய்யப்பட்ட பான்மசாலா, பான்பராக், குட்கா உள்ளிட்ட புகையிலை, போதை பொருட்களை விற்க தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் தடையை மீறி பெட்டிக்கடைகளில் இவை விற்கப்படுவதாக புகார் வந்ததையடுத்து நடவடிக்கை எடுக்க டிஜிபி உத்தரவிட்டார். அதன்பேரில் கடந்த 19ம் தேதி புதுவை முழுவதும் பெட்டிக்கடைகளில் அதிரடி சோதனை நடத்தி புகையிலை மற்றும் போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். 15 வியாபாரிகளை கைது செய்தனர்.அதனை தொடர்ந்து 2வது நாளாக நேற்று முன்தினமும் அதிரடி சோதனை நடத்தி புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 13 வியாபாரிகளையும் கைது செய்தனர். அதன்படி, கதிர்காமம் வழுதாவூர் ரோட்டில் அரசு பள்ளி எதிரே புகையிலை பொருட்கள் விற்ற கதிர்காமம் ஆனந்தா நகரை சேர்ந்த அருள்குமாரை (30) கோரிமேடு எஸ்ஐ இனியன் கைது செய்தார். அதேபோல், மேட்டுப்பாளையம் பிப்டிக் ரோடு சந்திப்பில் புகையிலை பொருட்கள் விற்ற முத்திரையர்பாளையம் கோவிந்தன்பேட்டையை சேர்ந்த அண்ணாதுரையை (59) மேட்டுப்பாளையம் ஏஎஸ்ஐ பக்தவச்சலம் கைது செய்தார். அவரிடம் இருந்து ரூ.1500 மதிப்புள்ள ஹான்ஸ் பாக்கெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.அரும்பார்த்தபுரம் திருக்குறளார் நகரில் பள்ளி அருகே புகையிலை போதை பொருட்கள் விற்ற அதே பகுதியை சேர்ந்த மாணிக்கத்தை (58) ரெட்டியார்பாளையம் எஸ்ஐ வீரபுத்திரன் கைது செய்தார். அவரிடமிருந்து ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள ஹான்ஸ் பாக்கெட் பறிமுதல் செய்யப்பட்டது. செஞ்சி சாலையில் அண்ணா நகரை சேர்ந்த ஜனார்த்தனன் (52), காந்தி வீதியில் கோவிந்தசாலையை சேர்ந்த ராஜா என்ற சோழன் (39) ஆகியோர் புகையிலை பொருட்கள் விற்றதாக பெரியகடை எஸ்ஐக்கள் முருகன், சண்முகப்பிரியா ஆகியோரால் கைது செய்யப்பட்டனர்.