×

கல்லிடைக்குறிச்சி அருகே காட்சிப்பொருளான ரேஷன் கடை

அம்பை,  பிப். 21:  பொட்டல் கிராமத்தில் கட்டி முடித்து காட்சிப்பொருளான ரேஷன் கடை கட்டிடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டு உள்ளது. கல்லிடைக்குறிச்சி அருகே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை  உறுதி திட்டத்தின் கீழ் சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றியம் சார்பில் ரூ.11.10 லட்சம் மதிப்பீட்டில் ரேஷன் கடை கட்டப்பட்டது. கடந்தாண்டே பணிகள் முடிவடைந்த நிலையிலும், இதுவரை கடை திறக்கப்படாமல் காட்சிப்பொருளாகவே உள்ளது.

இதுகுறித்து பஞ்சாயத்து முன்னாள் துணை தலைவர் சீவலமுத்து என்ற குமார்  கூறுகையில், பொட்டல், உலுப்படிப்பாறை  உள்ளிட்ட பகுதியில் 1500 குடும்பங்கள்     வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குடிமைப்பொருட் வழங்க எலுமிச்சை அருகே ரேஷன் கடை இயங்கி வந்தது.   கடந்த 2015ம் ஆண்டு பெய்த மழை வெள்ளத்தின்போது ரேஷன் கடைக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் ரேஷன் பொருட்கள் வீணானது. இதையடுத்து வாடகை கட்டிடத்திற்கு கடை மாற்றப்பட்டது. தற்போது ரூ.11.10 லட்சம் செலவில் ரேஷன் கடை கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாகியும் திறக்கப்படாமல் காட்சிப்பொருளாக உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம், புதிய ரேஷன் கடை  கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்,  என்றார்.


Tags : Exhibition ration shop ,Kallidaikurichi ,
× RELATED விஷம் குடித்த காவலாளி சாவு