சங்கரன்கோவில் அருகே அரசு பஸ்சிலிருந்து விழுந்து பெண் சாவு

சங்கரன்கோவில், பிப். 21:  குருவிகுளம் அருகே உள்ள ராமலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகையா மனைவி பேச்சியம்மாள் (48).  இவரது மகள் மற்றும் மகன், கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக்கில் படித்து வருகின்றனர். சம்பவத்தன்று பாலிடெக்னிக் கல்லூரியில் ஆண்டுவிழா நடந்தது. இந்த விழாவிற்கு குழந்தைகள் அழைப்பை ஏற்று பேச்சியம்மாள் புறப்பட்டு வந்துள்ளார். திருவேங்கடத்தில் இருந்து அரசு பஸ்சில் பேச்சியம்மாள் வந்துள்ளார். பாலிடெக்னிக் பஸ் நிறுத்தத்தில் பேச்சியம்மாள் இறங்கும்போது தவறி விழுந்தார். இதில் அவரது தலை மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.தகவலறிந்த திரண்ட அவரது குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகள், பேச்சியம்மாள் உடலை பார்த்து கதறி அழுதனர். கரிவலம்வந்தநல்லூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: