கோவை, பிப். 21: கோவை போளூவாம்பட்டி வனத்துறையினர் சார்பில் வெள்ளிங்கிரி மலையேறும் பக்தர்களை கண்காணிக்க வனத்துறை சார்பில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள பூண்டி அடிவாரத்தில் கடல்மட்டத்தில் இருந்து 6 ஆயிரம் அடி உயரத்தில் வெள்ளிங்கிரி மலை உள்ளது. இந்த ஆண்டு வெள்ளிங்கிரி மலையேற்றத்தில் ஈடுபட பக்தர்களுக்கு கடந்த மாதம் முதல் வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். இந்நிலையில், இன்று மகாசிவராத்திரி என்பதால் ஏராளமான பக்தர்கள் மலையேற்றத்தில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மலையில் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்லவும், மலைப்பகுதியில் சமையல் செய்து அன்னதானம் வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. முள்ளங்காடு முதல் தாணிகண்டி வரை வேட்டைத்தடுப்பு காவலர்கள் மற்றும் வனப்பணியாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.