×

சிஏஏவுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீதான அனைத்து வழக்குகளையும் திரும்ப பெற வேண்டும்

மயிலாடுதுறை,பிப்.21: சிஏஏவுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை திருப்ப பெற வேண்டும் என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மனிதநேய ஜனநாயக கட்சியின் நாகை வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் மாலிக் தலைமையில் நடைபெற்றது.மாவட்ட துணை செயலாளர்கள் ஜெஹபர் அலி முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் சங்கை தாஜ்தீன் வரவேற்றார். இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில அவைத்தலைவர் நாசர், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆக்கூர் ஷாஜஹான் ஆகியோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) என்பது மத அடிப்படையில் பிரிவினையை ஏற்படுத்த கூடியதாக இருக்கிறது. இது இந்திய அரசியல் சாசன சட்டத்தின் அடிப்படை கொள்கைகளுக்கும், சர்வதேச ஒப்பந்தத்திற்கும் எதிரானது.

அதுபோல் என்ஆர்சி, என்பிசி போன்ற குடியுரிமை தொடர்பான சட்டங்கள் நாட்டின் பிரிவினைகளையும், பாகுபாடுகளையும் ஏற்படுத்த கூடியதாக இருக்கிறது. எனவே சிஏஏ சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் என்பிஆர், என்ஆர்சி சட்டங்களை நாட்டில் அமல்படுத்த கூடாது எனவும், இக்கூட்டம் மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.தமிழகத்தில் சாதி மத கலவரங்களை தூண்டும் தீய சக்திகளுக்கு எதிராக ஜனநாயக சக்திகள் மேலும் வலிமையாக செயல்பட தயாராக வேண்டுமென இக்கூட்டம் தமிழக மக்களை கேட்டுக் கொள்கிறது.ஜனநாயகத்தை சமூக நீதியை சமூக நல்லிணக்கத்தை காக்க சிஏஏவுக்கு எதிராக தமிழக மக்கள் முன்னெடுக்கும் போராட்டங்கள் பொதுக்கூட்டங்களில் பங்கேற்கும் தலைவர்கள் பொதுமக்கள் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags : CAA ,
× RELATED சிஏஏ சட்டத்திற்கு இபிஎஸ்சுக்கு தெரியாமல் ஓபிஎஸ் ஆதரவு அளித்தார்