கும்பகோணம், பிப். 21: கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில் மேலவீதி மற்றும் தெற்கு வீதிகளில் குளம்போல் கழிவுநீர் தேங்கி நிற்பதால் நோய் பரவும் அபாயத்தில் பொதுமக்கள் உள்ளனர்.கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில் நான்கு வீதிகளிலும் துணிக்கடைகள், உணவு விடுதிகள், மருத்துவமனைகள், மருந்து கடைகள், குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளன. இதனால் இந்த பகதியில் எப்போதும் பொதுமக்கள் நடமாட்டம் இருக்கும். நாகேஸ்வரன் கோயில் தெற்கு வீதியில் 75க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன.நாகேஸ்வரன் கோயில் வடம்போக்கி தெருவில் பல ஆண்டுகளாக சாலை உள்வாங்கி கழிவுநீர் தேங்கி நின்றது. பின்னர் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு அப்பகுதியில் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. சாலை அமைக்கும் பணி நடந்து வருவதால் கடந்த ஒரு மாதமாக நாகேஸ்வரன் கோயில் மேலவீதி மற்றும் தெற்கு வீதிகளில் கழிவுநீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் கொசுக்கள், புழுக்கள் உற்பத்தியாகி அதன் வழியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.