×

தெப்பத்திருவிழா 27ல் துவக்கம் முன்னேற்பாடு பணிகள் மும்முரம்

திருச்சி, பிப்.20: ரங்கம் ரங்கநாதர் கோவிலில் தெப்பத்திருவிழா வரும் 27ம் தேதி தொடங்குகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. ரங்கம் ரங்கநாதர் கோயிலில் மாசி தெப்பத் திருவிழா வரும் 27ம் தேதி தொடங்கி மார்ச் 6ம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் நாளான 27ம் தேதி நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து தோளுக்கினியான் பல்லக்கில் காலை 7.30 மணிக்கு புறப்பட்டு ரெங்கவிலாஸ் மண்டபத்திற்கு காலை 8 மணிக்கு வந்து சேர்கிறார். அதன் பின் அங்கிருந்தவாறு நம்பொருமாள் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அதன்பின்னர் அன்று மாலை ஹம்ச வாகனத்தில் புறப்பட்டு உள்வீதிகளில் வலம் வந்து வாகன மண்டபம் வந்தடைகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மூலஸ்தானம் சென்றடைகிறார்.நாளான 28ம் தேதி ஹனுமந்தவாகனத்திலும், 29ம் தேதி கற்பகவிருட்ச வாகனத்திலும், மார்ச் 1ம் தேதி வெள்ளி கருட வாகனத்திலும், 2ம் தேதி இரட்டை பிரபை வாகனத்திலும், 3ம் தேதி யானை வாகனத்திலும் உள்திருவீதிகளில் வலம் வருகிறார். 7ம் நாளான 4ம் தேதி மாலை 6.30 மணியளவில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் சந்தனு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு நெல்லளவு கண்டருளி உள்வீதிகளில் வலம் வந்து மூலஸ்தானம் வந்தடைகிறார்.

முக்கிய திருநாளான தெப்பத்திருவிழா 8ம் நாளான 5ம் தேதி நடைபெறுகிறது. அன்று மாலை 3 மணியளவில் மூலஸ்தானத்திலிருந்து நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு மேலவாசலில் உள்ள தெப்பக்குள ஆஸ்தான மண்டபத்திற்கு மாலை 5 மணிக்கு வந்தடைகிறார். இரவு 7.15 மணியளவில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7.30 மணி முதல் இரவு 9 மணிவரை தெப்ப உற்சவம் கண்டருளுகிறார். பின்னர் அங்கிருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.தொடர்ந்து 9ம் திருநாளான 6ம் தேதி காலை நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி அன்று மதியம் தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபம் சேருகிறார். அங்கு பகல் 2 மணி முதல் மாலை 4 மணிவரை திருமஞ்சனம் கண்டருளுகிறார். பின்னர் மண்டபத்திலிருந்து ஒற்றை பிரபை வாகனத்தில் புறப்பட்டு பந்த காட்சியுடன் சித்திரை வீதிகளில் வலம் வந்து படிப்பு கண்டருளி இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடையும் நிகழ்ச்சியுடன தெப்பத்திருவிழா நிறைவடைகிறது. முன்னேற்பாடு பணிகளை ஏற்பாடுகளை ரங்கம் கோவில் இணை ஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் கந்தசாமி மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.


Tags : Theppathiruvil 27 ,
× RELATED மணப்பாறை அருகே தொழிலாளி வீட்டில் நகை, பணம் கொள்ளை