சமயபுரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்: 140 பேர் மீது வழக்குப்பதிவு

மண்ணச்சநல்லூர், பிப்.20: சமயபுரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 140 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்திய குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் சமயபுரம் நால்ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக, மதிமுக, கம்யூனிஸ்ட், அம்பேத்கர் மக்கள் இயக்கம் உள்பட பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெயசீலன் தலைமை வகித்தார். சமயபுரம் முன்னாள் நகர திமுக செயலாளர் செல்வராஜ், மதிமுக மாவட்டச் செயலாளர் சேரன், அம்பேத்கர் மக்கள் இயக்க மாவட்டச் செயலாளர் புரட்சிமணி, நாம் தமிழர் நகர செயலாளர் பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர். ஏற்கனவே சமயபுரத்தில் பாதுகாப்பு கருதி கடந்த 12ம் தேதி முதல் 27ம் தேதி வரை பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் போன்றவை நடத்துவதற்கு போலீஸ் தரப்பில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த தடை உத்தரவை மீறி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட 30 பெண்கள் உள்பட 140 பேர் மீது சமயபுரம் போலீசார் சட்டவிரோதமாக கூடுதல், பொது பாதைக்கு இடையூறு ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories: