மாநகராட்சி அதிகாரிகள் இருவர் சஸ்பெண்ட்

திருச்சி, பிப்.20: பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்ய மாநகராட்சி பணியாளர்களை பாதாள சாக்கடையில் இறக்கிய மாநகராட்சி அதிகாரிகள் 2 பேரை ஆணையர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

திருச்சி மாநகராட்சியில் தில்லைநகர் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் கோ.அபிஷேகபுரம் கோட்டத்திற்கு உட்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளனர். இதையடுத்து மாநகராட்சி துப்புரவு பணியாளர்களை கொண்டு பாதாள சாக்கடை அடைப்பு சரி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது பணியாளர்கள் மேன்ஹோல் வழியாக எந்தவித பாதுகாப்பும் இன்றி இறங்கியதாக கூறப்படுகிறது.இந்நிலையில் இது குறித்து படங்களுடன் சமூக ஆர்வலர்கள் மாநகராட்சி ஆணையருக்கு புகார் அளித்ததாக தெரிகிறது. இதையடுத்து மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்யும்போது பணியாளர்கள் மேன்ஹோல் வழியாக உள்ளே சென்று இறங்கினரா என விசாரணை நடத்தினார். அதன் அடிப்படையில் தற்ேபாது கடந்த சில தினங்களுக்கு முன்பு துப்புரவு பணியாளர்களை அழைத்துச்சென்ற கோ.அபிஷேகபுரம் கோட்டத்திற்கு உட்பட்ட இளநிலை பொறியாளர் இப்ராஹிம் மற்றும் உதவி செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோரை மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இதற்கிடையில் மாநகராட்சி ஆணையருக்கு அனுப்பப்பட்ட வாட்ஸ்அப் படம் மாநகராட்சி பகுதிகளில் இதற்கு முன்பு நடந்த பழைய சம்பவம் என பேசப்பட்டு வருகிறது. எது எப்படியாயினும் சம்பவம் நடந்தது உண்மைதானே என அதிகாரிகள் தரப்பில் விளக்கம் தரப்படுவதாகவும் கூறப்படுகிறது. ஆணையரின் அதிரடி நடவடிக்கையால் மாநகராட்சி பணியாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

Related Stories: