திருச்சி, பிப். 20: தானியங்கி உற்பத்தி துறையில் தான் அதிகம் வேலை வாய்ப்பு உள்ளதாக எஸ்ஐடி கல்லூரியில் நடந்த கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. திருச்சி அரியமங்கலம் சேஷசாயி தொழில்நுட்பக் கல்லூரியில், ‘தொழிற்சாலை உற்பத்தி தானியக்கம்(புராசஸ் ஆட்டோமேஷன்) குறித்த கருத்தரங்கம் நேற்று நடந்தது. கல்லூரி முதல்வர் விஜயகுமார் தலைமை வகித்தார். கருவியியல் துறைத்தலைவர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக சென்னையில் உள்ள யோகோகாவா இந்தியா நிறுவனத்தின் பிராந்திய மேலாளர் மோகன் பேசுகையில், தொழில்நுட்ப உலகம் ஆட்டோமேஷன் எனப்படும் தானியங்கி துறையை சார்ந்தே இயங்கி வருகிறது. விரைவில் மனிதனின் அனைத்து செயல்பாடுகளும் தானியங்கியாக மாறிவிடும். ஏற்கனவே விவசாயம், நெசவு மற்றும் தொழில்துறைகளை தானியங்கி முறை ஆக்கிரமித்துள்ளது. உலக நாடுகள் பல, இதில் தொடர் முன்னேற்றம் கண்டு வரும் நிலையில் இந்தியா தற்போதுதான் பிற நாடுகளின் தொழில்நிறுவனங்களுடன் கைகோர்த்து வருகிறது. எனவே மாணவர்கள் எல்லா காலங்களிலும் வளர்ச்சி தரும் உற்பத்தி துறையில் கவனம் செலுத்த வேண்டும்.