ஊத்துக்கோட்டை, பிப். 20: பெரியபாளையம் அருகே புன்னப்பாக்கம் கிராமத்தில் செங்கல் சேம்பரில் இருந்து மீட்கப்பட்ட 247 கொத்தமைகளும், அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பெரியபாளையம் அருகே புன்னப்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் செங்கல் சேம்பரில் 100க்கும் மேற்பட்டவர்கள் கொத்தடிமைகளாக வேலை செய்வதாக கலெக்டர் மகேஸ்வரிக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், திருவள்ளூர் மாவட்ட சட்ட பணி ஆணைக்குழு செயலாளரும், நீதிபதியுமான சரஸ்வதி தலைமையில் ஊத்துக்கோட்டை தாசில்தார் முருகநாதன், ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சந்திரதாசன், வெங்கல் இன்ஸ்பெக்டர் ஜெயவேல், வருவாய் ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் ஊத்துக்கோட்டை எஸ்ஐ ராக்கிகுமாரி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் புன்னப்பாக்கம் கிராமத்தில் உள்ள செங்கல் சேம்பரில் சோதனை நடத்தினர்.
அப்போது, ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஆண்கள் 109 பேரும், பெண்கள் 88 பேரும், சிறுவர் 32, சிறுமிகள் 18 பேர் என 247 பேரை மீட்டனர். இதில், கொத்தடிமைகளாக மீட்கப்பட்டவர்கள் விசாரணைக்காக 3 லாரிகளில் ஊத்துக்கோட்டைக்கு அழைத்துச் சென்றனர். அவர்களிடம் திருவள்ளூர் ஆர்டிஓ வித்யா விசாரணை நடத்தி தாசில்தார்கள் திருவள்ளூர் தமிழ்செல்வம், ஊத்துக்கோட்டை முருகநாதன், டிஎஸ்பி சந்திரதாசன் முன்னிலையில் மீட்பு சான்றிதழ்களை வழங்கி அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், மீட்கப்பட்டதில் பெரியவர்களுக்கு மட்டும் 190 பேருக்கு தலா ₹20 ஆயிரம் வீதம் அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.