×

பென்னாகரம் பஸ் ஸ்டாண்டில் நவீன கழிப்பிடத்தில் கூடுதல் கட்டணம் வசூல்

பென்னாகரம்,  பிப்.20: பென்னாகரம் பஸ் ஸ்டாண்டில் உள்ள நவீன கழிப்பிடத்தில்,  பேரூராட்சி நிர்ணயித்த கட்டணத்தை விட, கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக  பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஒகேனக்கல்லுக்கு வெளிமாநிலம்  மற்றும் மாவட்டத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன்  வந்து செல்கின்றனர். வார விடுமுறை, விசேஷ நாட்களில் ஒகேனக்கல் செல்ல பென்னாகரம் பஸ் ஸ்டாண்டிற்கு ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர். மேலும், பென்னாகரம் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ,  மாணவிகள், அரசு அலுவலகம், தனியார் தொழிற்சாலைக்கு வேலைக்காக தர்மபுரி,  கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர், சேலம் ஆகிய பகுதிக்கு செல்ல, நாள்தோறும் 5  ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பென்னாகரம் பேருந்து நிலையம்  வந்துசெல்கின்றனர்.பென்னாகரம் பஸ் ஸ்டாண்டில், பேரூராட்சி சார்பில் பயணிகள் வசதிக்காக இலவச  கழிப்பிடம் மற்றும் கட்டண கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் இலவச  கழிப்பிடத்தை முறையாக பராமரிக்காததால் பயணிகள் பயன்படுத்த  முடிவதில்லை. மாறாக கட்டண கழிப்பிடத்தையே அனைவரும் பயன்படுத்துகின்றனர்.  இந்த கழிப்பிடத்தை குத்தகை எடுத்துள்ளனர். இவர்கள் கூடுதல் கட்டணம் வசூலித்து வருகின்றனர். இதுகுறித்து பேரூராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், கண்டுகொள்ளவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, கூடுதல் கட்டணம்  வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

Tags : Pennagaram Bus Stand ,
× RELATED பென்னாகரம் பஸ் ஸ்டாண்ட் பின்புறம் சேறும், சகதியுமான சாலையால் அவதி