அவிநாசி, பிப்.20: அவிநாசி வட்டார அளவிலான வங்கியாளர் கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். நபார்டு வங்கி மாவட்ட மேலாளர் ராஜூ, மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் மனோகர், மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மகாதேவன், நிதிசார் விழிப்புணர்வு மைய ஆலோசகர் சுந்தரவடிவேலு, அவிநாசி ஒன்றிய ஆணையாளர் அரிகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) லட்சுமிசாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், எஸ்.பி.ஐ. கனரா, ஐசிஐசிஐ. தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி, எச்.டிஎப்.சி. ஐஓபி. உள்ளிட்ட வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டு, விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கும் அடமானம் இல்லாத கடனுதவி குறித்தும் மேலும், திருப்பூர் மாவட்ட வேளாண்மைத்துறை சார்பில், பிரதம மந்திரி விவசாய நிதி திட்டத்தில் விவசாயிகள் கடன் பெறுவது குறித்தும் விளக்கி பேசினர். கூட்டத்தில் அவிநாசி, கருவலூர், சேவூர், அனுப்பர்பாளையம், திருப்பூர், பெருமாநல்லூர், கருவலூர் மற்றும் தெக்கலூர் வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.