அவிநாசி, பிப்.20: அவிநாசி அருகே தொரவலூர் அண்ணமார்சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை இரு தரப்பினர் சம்மதத்துடன் ஒற்றுமையாக நடத்த வேண்டும் என்று ஒரு பிரிவை சேர்ந்தவர்கள் அவிநாசி போலீஸ் டி.எஸ்பி. பாஸ்கரனிடம் நேற்று மனு அளித்தனர்.
அவிநாசி தாலூகா தொரவலூரில் அண்ணமார்சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒரு சமூகத்தை சேர்ந்த 5000 பேர் வழிவழியாக குலதெய்வ வழிபாடு செய்து வருகின்றனர். இந்த சமூகத்தினருள், ஒரு தரப்பினர் மட்டும் கோயில் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடுகளை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த மற்றொரு தரப்பினர் டி.எஸ்பி.யிடம் மனு அளித்தனர்.
அதில், இரு தரப்பினர் சம்மதத்துடன், அனைத்து பங்காளிகளும் இணைந்து ஒற்றுமையாக கும்பாபிஷேகத்தை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் கும்பாபிஷேகத்திற்காக பிப்ரவரி 26ம் தேதி பாலாலயம் செய்வதையும் தடுத்தி நிறுத்தி, சட்டம் ஒழுங்கு பிரச்னை எதுவும் ஏற்படாமல் தடுக்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர். மனுவை பெற்றுக்கொண்ட டி.எஸ்பி. பாஸ்கரன், இது தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.