கோவை, பிப். 20:தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிறப்பாக செயல்பட்டதற்கு கோவை அரசு மருத்துவமனைக்கு 4வது இடம் கிடைத்துள்ளது. தமிழகத்தில் உள்ள ஏழை எளியவர்களுக்கு நவீன வசதிகளை வழங்கும் வகையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கும் குறைவாக உள்ள 1.58 கோடி குடும்பங்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், தமிழக அரசு பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா திட்டத்தை முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்துடன் ஒருங்கிணைந்துள்ளது. இத்திட்டம் யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் அனுமதிக்கப்பட்ட 1027 மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை முறைகள், 154 சிறப்பு சிகிச்சை முறைகள், 154 தொடர் சிகிச்சை முறைகள், 38 முழுமையான பரிசோதனை முறைகள், 424 பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா திட்ட சிகிச்சை முறைகள், 8 உயர் சிகிச்சை முறைகள் அளிக்கப்படுகிறது. இத்திட்டம் மாநிலத்தில் 224 அரசு மருத்துவமனைகள் மற்றும் 733 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 977 மருத்துவமனைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் கடந்த 2012 முதல் 2019ம் ஆண்டு வரை 34.76 லட்சம் பயனாளிகள் ரூ.5,800.35 கோடி காப்பீட்டு தொகையில் பயனடைந்துள்ளனர். இதில், அரசு மருத்துவமனைகளில் மட்டும் 15.34 லட்சம் பயனாளிகள் பயடைந்துள்ளனர். இந்நிலையில், மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிறப்பாக சிகிச்சை அளித்த அரசு மருத்துவமனைக்கள் தொடர்பான பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முதலிடமும், மதுரை அரசு மருத்துவமனை 2ம் இடமும், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை 3ம் இடமும், கோவை அரசு மருத்துவமனை 4வது இடமும் பிடித்துள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் ரூ.1.84 கோடி காப்பீட்டு தொகையில் நோயாளிகள் பயனடைந்துள்ளனர். பிற அரசு மருத்துவமனைகளை விட குறைந்த அளவு மருத்துவர்கள் இருந்தாலும் கூட கோவை அரசு மருத்துவமனை 4வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.