கூடலூர், பிப். 20: கூடலூர் அருகே வனப்பகுதியில் இறந்த குட்டி யானையின் அருகே வனத்துறையினரை நெருங்க விடாமல் மூன்றாவது நாளாக தாய் யானை பாசப்போராட்டம் நடத்தி வருகிறது.நீலகிரி மாவட்டம் கூடலூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட கொச்சு குன்னு தனியார் எஸ்டேட் பகுதியையொட்டிய வனப்பகுதியில் குட்டி யானை ஒன்று கடந்த மூன்று நாட்களுக்கு முன் இறந்துள்ளது. இதையறித்த வனத்துறையினர், அங்கு சென்ற போது குட்டி யானை ஒன்று இறந்து கிடப்பதையும் அருகில் 3 யானைகள் நிற்பதையும் பார்த்துள்ளனர். இதையடுத்து வனத்துறையினர் இறந்த குட்டி யானையின் அருகே செல்ல முயற்சித்தனர். ஆனால் தாய் யானை உட்பட்ட மூன்று யானைகள், குட்டியின் அருகே நின்று கொண்டு பாசப்போராட்டத்தில் ஈடுபட்டதை அறிந்து அருகில் செல்வதை கைவிட்டுவிட்டனர்.தாய் யானை 3வது நாளாக நேற்றும் குட்டியின் அருகிலேயே நிற்பதால் இறந்த குட்டியை யானையின் உடல் கூறு ஆய்வு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. யானையை தொந்தரவு செய்யாமல் யானை தானாகவே அங்கிருந்து செல்லும்வரை குட்டியின் அருகில் செல்லும் நடவடிக்கை வனத்துறையினர் கைவிட்டு உள்ளனர்.