பொன்னமராவதி, பிப்.20: பொன்னமராவதி அருகே உள்ள ரெகுநாதபட்டியில் இரண்டு மாதங்களுக்கு மேலாக சாலை தோண்டப்பட்டு சாலைப்பணிகள் நடைபெறாமல் கிடப்பதால் பேருந்து வசதியின்றி மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியத்திற்குட்பட்ட ரெகுநாதபட்டி ஆர்.பாலகுறிச்சி, சீகம்பட்டி, குன்னத்தூர் வழியாக திருச்சி செல்லும் சாலை குண்டும் குழியுமாக கிடந்ததால் சாலையினை புதுப்பிக்கும் பணி தொடங்கப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் சாலையை சீரமைக்க பள்ளம் தோண்டப்பட்டு இரண்டு மாதங்களுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால் அவ்வழியாக பேருந்து இயக்கப்படுவதில்லை. இதனால் வேலைக்கு செல்பவர்கள் மட்டுமின்றி, மாணவர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு செல்ல முடியாமல் மூன்று கிலோ மீட்டர் தூரம் உள்ள கட்டுக்குடிபட்டி என்ற ஊருக்கு நடந்து சென்று பின்னர் அங்கிருந்து பள்ளி, கல்லூரிகளுக்கு செல்கின்றனர். இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு சரியான நேரத்தில் செல்ல முடியாமல் மாணவர்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாணவர்கள் நலன்கருதி சாலையை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.