பாகூர், பிப். 19: கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையார்குப்பத்தை சேர்ந்தவர் சாம்பு (எ) சாம்பசிவம் (34). அமைச்சர் கந்தசாமியின் ஆதரவாளர். முன்னாள் கவுன்சிலர் வீரப்பன் கொலை வழக்கில் முக்கிய சாட்சியான இவர், கடந்த 31ம் தேதி கிருமாம்பாக்கம் அரசு தொடக்கப்பள்ளி அருகே வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குபதிந்து பிள்ளையார்குப்பத்தை சேர்ந்த அமுதன், அன்பரசன், மேலவாஞ்சூர் பாக்கியராஜ், கூடப்பாக்கத்தை சேர்ந்த மாறன் (எ) மணிமாறன் (22), சார்லி (எ) சார்லஸ் (22), கவியரசன் (21), வழுதாவூரை சேர்ந்த ஜெகன், அபிஷேகப்பாக்கத்தை சேர்ந்த விஜயகுமார் (26), வீரசெல்வன் (26), விஜயசாரதி (20), செல்வம், பிள்ளையார்குப்பம் பாரதி (எ) ஜெகஜீவன்ராம் (33), கடலூர் அடுத்துள்ள குமராபுரத்தை சேர்ந்த பரணி (எ) பரணிகுமார் (29) ஆகியோரை கிருமாம்பாக்கம் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.