உளுந்தூர்பேட்டை, பிப். 19: உளுந்தூர்பேட்டை நகரப்பகுதியில் உள்ள பாளையப்பட்டு அங்காளம்மன் கோயில் மயானக்கொள்ளை திருவிழாவை முன்னிட்டு கொடி ஏற்றப்பட்டு விழா நடைபெற்று வருகிறது. வருகிற 27ம் தேதி வரையில் நடைபெற உள்ள இந்த திருவிழாவின் போது சட்டம்-ஒழுங்கு பிரச்னை காரணமாக சமாதான கூட்டம் தாசில்தார் (பொறுப்பு) கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இன்ஸ்பெக்டர் எழிலரசி, சப்இன்ஸ்பெக்டர் கோபி, மண்டல துணை வட்டாட்சியர்கள் அருள்மொழி, தவமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் கோயில் விழாவினை நடத்திட வேண்டும். பாட்டுக்கச்சேரி வைத்தால் வெளியூரில் இருந்து வருபவர்களால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதால் பாட்டுக்கச்சேரிக்கு அனுமதி இல்லை என்றும், திருவிழாவின் போது இரண்டு சமூகத்தினரும் ஒற்றுமையுடன் இருந்து காவல்துறைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே பாடல்களை ஒலிபரப்ப வேண்டும். சாமி ஊர்வலம் அனுமதிக்கப்பட்ட பாதையிலேயே செல்ல வேண்டும். பேனர் வைப்பது, குரூப் டி சர்ட்கள் அணிய கூடாது. திருவிழாவின் போது ஏதேனும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் விழா குழுவினரே முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் கோயில் விழாக்குழுவினர் உள்ளிட்ட காவல்துறை, வருவாய்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.