×

செல்போனில் நூதனமாக பேசி முதியவரின் வங்கி கணக்கில் ரூ.5.75 லட்சம் அபேஸ் காரைக்குடியில் பரபரப்பு

காரைக்குடி, பிப். 19:  காரைக்குடியில் செல்போனில் நூதனமாக பேசி முதியவரின் வங்கி கணக்கிலிருந்து ரூ.5.75 லட்சத்தை அபேஸ் செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர். காரைக்குடி அருகே அரியக்குடியை சேர்ந்தவர் சவரிமுத்து (60). இவர், காரைக்குடி ஸ்டேட் வங்கியில் கணக்கு வைத்துள்ளார். கடந்த வாரம் சவரிமுத்துவின் செல்போன் எண்ணுக்கு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், ஸ்டேட் வங்கியில் இருந்து பேசுவதாக தெரிவித்து ரகசிய எண்ணை கேட்டுள்ளார்.சவரிமுத்துவும் வங்கி அதிகாரிகள் பேசுவதாக நினைத்து ரகசிய எண்ணை கொடுத்துள்ளார். இந்நிலையில் சவரிமுத்து நேற்று வங்கிக்கு சென்று கணக்கை சரிபார்த்துள்ளார். அப்போது அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.5 லட்சத்து 74 ஆயிரத்து 996 எடுக்கப்பட்டிருந்தது.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், கடந்த சில நாட்களுக்கு முன் வங்கி அதிகாரி போல் ஒருவர் தன்னிடம் பேசி ரகசிய எண்ணை கேட்டு வாங்கியதாக வங்கி பணியாளர்களிடம் தெரிவித்தார். அப்போதுதான், போனில் பேசியவர் ரகசிய எண்ணை வாங்கி பணத்தை எடுத்து மோசடி செய்து தெரியவந்தது. இதுகுறித்து சவரிமுத்து காரைக்குடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் தெற்கு எஸ்ஐ தவமுனி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். செல்போனில் ரகசிய எண்ணை பெற்று முதியவரின் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுத்து மோசடி செய்த சம்பவம் காரைக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
× RELATED கணபதிக்கு சிறப்பு அபிஷேகம்