போலீசார் அதிரடி சோதனையில் மாட்டு வண்டிகளை போட்டு விட்டு மணல் கொள்ளையர்கள் தப்பியோட்டம்

மணப்பாறை, பிப்.19: மணப்பாறை அருகே மணல் கொள்ளை தொடர்பாக போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் மாட்டு வண்டிகளை போட்டுவிட்டு கடத்தல்காரர்கள் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.மணப்பாறையை அருகே சித்தாநத்தம் அரியாறு ஆற்றுப்படுகைகளில் 15க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் மணல் கொள்ளை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து மணப்பாறை டிஎஸ்பி குத்தாலிங்கம் உத்தரவின் பேரில் நெடுஞ்சாலை ரோந்து வாகன போலீசார் நேற்று சித்தாநத்தம் ஆற்றுப்படுகைகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது சிலர் திருட்டுத்தனமாக மணல் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. அரியாற்றில் சல்லடை மூலம் மணலை சலித்து ஒரு இடத்தில் மொத்தமாக கொட்டி வைத்துள்ள்னர். பின்னர் மாட்டு வண்டி மூலம் மணலை கடத்தி சென்று அதனை லாரி மூலம் விற்பனைக்கு கொண்டு செல்வது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் மணல் கொள்ளையர்களை சுற்றி வளைத்தனர். அப்போது அவர்கள் மாட்டு வண்டியில் இருந்த மணலை கொட்டிவிட்டு, மாடுகளை அவிழ்த்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். மேலும் ஒரு சில மாட்டு வண்டிகளை மணல் மற்றும் மாட்டுடன் விட்டுச்சென்றனர். மணலுடன் நின்ற மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்த போலீசார் அனுமதியின்றி மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: