முசிறி, பிப்.19: முசிறி அருகே அணைப்பட்டியை சேர்ந்தவர் மாணிக்கம்(62), விவசாயி. இவர் எங்கு சென்றாலும் சைக்கிளில் சென்று வருவது வழக்கம். நேற்று முசிறிக்கு வந்தவர் அப்பகுதியில் உள்ள கோயிலில் இரவு படுத்திருந்து ஓய்வு எடுத்துவிட்டு அதிகாலை 2.30 மணி அளவில் சைக்கிளில் ஊருக்கு திரும்பியுள்ளார். நாமக்கல்-திருச்சி சாலையில் முசிறி பஸ் நிலையம் அருகே ஜெயங்கொண்டத்தில் இருந்து காங்கேயத்திற்கு சவுக்குக் கட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி இவர் வந்த சைக்கிள் மீது மோதியது. இதில் மாணிக்கம் படுகாயமடைந்தார். முசிறி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி மாணிக்கம் இறந்தார். இச்சம்பவம் குறித்து முசிறி போலீசார் வழக்குப்பதிந்து ஜெயங்கொண்டத்தை சேர்ந்த லாரி டிரைவர் கோவிந்தராசு(39) என்பவரை கைது செய்தனர்.