கும்பகோணம், பிப். 19:
தஞ்சை கலெக்டர் கோவிந்தராவுக்கு மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுந்தர விமலநாதன் கோரிக்கை மனு அனுப்பினார். அதில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், கல்வி ஆராய்ச்சி மையங்களிலும் மகாத்மா காந்தியின் 150வது ஆண்டு விழா நினைவாக மகாத்மா காந்தியின் முழு உருவச்சிலை அமைத்து அவரது நினைவை போற்ற வேண்டும். இதற்கு அரசாணையை தமிழக அரசு வெளியிட்டு பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக செயல்படுத்த வேண்டும்.இந்தியாவின் விடுதலைக்காக 25 வயதுக்குள் தூக்கிலிடப்பட்டு இறந்த விடுதலை போராட்ட வீரர்கள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோரின் வரலாற்றை பள்ளி பாடப்புத்தகங்களில் வருகிற கல்வியாண்டில் கட்டாயம் இடம் பெற அரசாணை வெளியிட வேண்டும். மாவட்டத்தில் புதிதாக அமைத்துள்ள, அமைக்கப்படவுள்ள அனைத்து நகர்கள் மற்றும் குடியிருப்பு நகர்களில் உள்ள சாலைகள், வீதிகள் மற்றும் தெருக்களுக்கு மகாத்மா காந்தி, நேதாஜி, நேரு, பாரதியார், காமராசர், தில்லையாடி வள்ளியம்மை, வீரபாண்டிய கட்டபொம்மன், குமரப்பா, வஉசிதம்பரனார், அப்துல் கலாம் ஆசாத் போன்ற விடுதலை போராட்ட தலைவர்களின் பெயர்களை இடப்பட்டு வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை பதிவேடுகளில் இடம்பெற அரசாணை வெளியிட வேண்டும்.