கும்பகோணம், பிப். 19: கும்பகோணம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நெல் தரிசு மற்றும் கோடை பருவத்தில் குறைந்த செலவில் குறைந்த நாட்களில் இருமடங்கு உற்பத்தி மும்மடங்கு வருமானம் பெற விவசாயிகள் அனைவரும் பயறுவகை பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை முறையை பின்பற்றி பயறுவகை பயிர் சாகுபடி செய்து உற்பத்தியை பெருக்க வேண்டும். விவசாயிகளே விதை உற்பத்தி செய்து விதை விநியோகம் செய்யலாம். பயறுவகை பயிர்களின் நடப்பு நெல் தரிசு மற்றும் கோடை பட்டம் பயிர் சாகுபடி உளுந்து ரகங்களான ஆடுதுறை வம்பன் ஆகிய ரகங்களை தேர்வு செய்து விவசாயிகள் விதை நோ்த்தி செய்து வரிசை நடவு செய்யலாம்.மேலும் மக்கிய தொழுஉரம் ஒரு ஏக்கருக்கு 5 டன் இட வேண்டும். விளை நிலங்களில் மண் வளத்தை பாதுகாக்க பண்ணைக்கழிவு பயன்படுத்துவதால் ரசாயன உரங்கள் இடுவதை தவிர்த்து கொள்ளலாம். விவசாயிகள் அனைவரும் மண் பரிசோதனை மற்றும் உயிர் உரங்கள் பயன்படுத்தி மண் வளத்தை பாதுகாக்க வேண்டும். பூஞ்சான விதை நேர்த்தியான சூடோமோனாஸ் டிவிரிடி ஒரு கிலோ விதைக்கு 10 கிராம், டிரைக்கோடொமாவிரிடி 4 கிராம், ரைசோபியம் 200 கிராம் ஆகியவற்றை விதை நேர்த்தி செய்து பூச்சி மற்றும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தலாம். ஒருங்கிணைந்த உர மேலாண்மை ஒரு ஏக்கருக்கு 10 கிலோ யூரியா, 20 கிலோ சூப்பர் பாஸ்பேட், 10 கிலோ பொட்டாஷ், 8 கிலோ சல்பர் ஆகியவற்றை அடி உரமாக இட்டு அதிக மகசூலை பெறலாம்.