×

குளித்தலை காவல் நிலையத்தில் காதல் திருமண ஜோடி தஞ்சம் வக்கீல்கள் வாக்குவாதத்தால் பரபரப்பு

குளித்தலை, பிப். 19: கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த தோகைமலை அருகில் உள்ள கழுகூரைச் சேர்ந்தவர் இளங்கோவன் மகன் மாரியப்பன்(30). இவர் வேலாயுதம்பாளையத்தில் உள்ள நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
தோகைமலை அருகே உள்ள கல்லடை கே.புதூரை சேர்ந்த பிலிப் மகள் மரிய இன்ப சீலி(27). முதுகலைப் பட்டம் பெற்று தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த ஏழு வருடங்களாக காதலித்து வந்தனர். இந்நிலையில் காதலர் தினமான கடந்த 14ம் தேதி கொடுமுடி கோயிலில் திருமணம் செய்து கரூரில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில் நேற்று காதலர்கள் இருவரும் வெவ்வேறு இனத்தவர் என்பதால் பாதுகாப்பு கேட்டு குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். அதன் பிறகு குளித்தலை மகளிர் காவல் நிலையத்தில் இருந்து அவர்களது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மகளிர் காவல் நிலையத்திற்கு வந்தனர். அப்போது இருதரப்பு வக்கீல்கள் கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு காவல் நிலையம் முன்பு சலசலப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் அருகிலிருந்த காவல் நிலையத்திலிருந்து காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மரிய இன்பசீலி காதலனுடன் செல்வதாக உறுதியாக இருந்ததாலும் மேஜர் என்பதாலும் போலீசார் அவரை காதலனுடன் அனுப்பி வைத்தனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் குளித்தலை கோட்டத்திற்கு ஒரே மகளிர் காவல் நிலையம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும குடும்ப பிரச்னை காரணமாக புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஒரு சில நேரங்களில் பெண் காவலர்கள் பற்றாக்குறையால் காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறும் நிலை ஏற்படுகிறது. இந்த மகளிர் காவல் நிலையத்தில் ஒரு பெண் ஆய்வாளர், ஒரு உதவி ஆய்வாளர் உள்பட 14 பெண் போலீசார் இருக்க வேண்டும்.ஆனால் குறைந்த அளவே பெண் காவலர்கள் இருப்பதால் ஒரு சில நேரங்களில் குடும்ப பிரச்னைக்காக வரும் பொதுமக்களை சமாதானப்படுத்த மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகிறார்கள். இந்நிலையை உணர்ந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கூடுதல் பெண் காவலர்களையும் நியமிக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Asylum seekers ,police station ,Koodalai ,
× RELATED கம்பம் போலீஸ் நிலையத்தில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்