×

பேருந்து நிறுத்தங்களில் நிழல் பந்தல்கள் அமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

அரவக்குறிச்சி. பிப். 19: அரவக்குறிச்சி பகுதியில் கடும் கோடை வெயில் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள பேருந்து நிறுத்தங்களில் கோடைகால நிழல் பந்தல் அமைக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்பொழுது கோடை காலம் ஆரம்பிக்க உள்ள நிலையில் ஆரம்பமே வெயில் தாக்கம் கடுமையாக உள்ளது. கோடை வெயில் காரணமாக அரவக்குறிச்சியில் கோடை கால ஆரம்பமாக வழக்கத்தை விட பிப்ரவரி மாத இரண்டாவது வாரத்திலேயே கடும் வெயில் அடிக்கின்றது. அவ்வப்போது அனல் காற்றுடன் வெயில் வாட்டி வதைக்கின்றது. இதனால் மக்களின் இயல்பு வாழ்கை பாதித்துள்ளது.வருகின்ற மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் அக்னி நட்சத்திரத்தின் காரணமாக வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாகும். இந்நிலையில் அரவக்குறிச்சியிலிருந்து வேலைக்காக வெளியூர் செல்பவர்கள், வியாபார நிமித்தமாக வெளியூர் செல்லும் வியாபாரிகள், வெளியூரிலிருந்து பொதுத் தேர்வுக்காக அரவக்கறிச்சி வரும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், மருத்துவமனைக்கு வரும் கிராம நோயாளிகள், தாலுகா அலுவலகம், காவல்நிலையம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பேருராட்சி அலுவலகம், கல்வி அலுவலகம், வங்கிகள், கால்நடை மருத்துவமனை, வேளாண் அலுவலகம்என்று பல்வேறு அலுவலகங்களுக்கு தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் தங்கள் வேலை நிமித்தமாக அரவக்குறிச்சி வருகின்றனர். இவர்கள் வேலை முடிய மதியமாகின்றது.இவர்கள் திரும்பி செல்வதற்காக பேருந்து நிறுத்தங்களில் பஸ் வரும் வரை வாட்டி வதைக்கும் வெயிலில் வெட்ட வெளியில் நின்று காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் குழந்தைகளுடன் வரும் பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் வெயில் கடுமையின் கரணமாக பெரிதும் அவதிப்படுகின்றனர்.எனவே அரவக்குறிச்சியிலுள்ள பேருந்து நிறுத்தங்களான தாலுகா அலுவலம் அருகில், கரூர் ரோடு சந்திப்பு சாலை மற்றும் மேற்கு பேருந்து நிலைய பஸ் நிறுத்தம், காவல் நிலையம் அருகில் ஆகிய இடங்களில் பொதுமக்கள் நலன் கருதி கோடைகால நிழல் பந்தல்கள் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Shadow balls ,bus stops ,public ,
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...