கோவில்பட்டி அருகே தொழுவத்தில் ஆடுகள் திருடிய 4 பேர் கைது

கோவில்பட்டி, பிப். 19:  கோவில்பட்டி அடுத்த மந்தித்தோப்பு கீழத்தெருவைச் சேர்ந்த ராமசாமி மகன் ராமராஜ் (40). விவசாய தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் இரவு தனது வீட்டருகேயுள்ள  தொழுவத்தில் ஆடுகளை அடைத்து விட்டு வீட்டிற்கு தூங்க சென்றார். நேற்று காலை திரும்பிச்சென்றபோது அங்கிருந்த 3 ஆடுகள் திருடு போனது கண்டு பதறினார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த கோவில்பட்டி மேற்கு எஸ்ஐ விசாரணை மேற்கொண்டார். இதில் கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் 6வது தெருவைச் சேர்ந்த ராமசாமி மகன் முத்துகிருஷ்ணன் (28),  9வது தெருவைச் சேர்ந்த அங்குசாமி மகன் முருகன் (33), மந்தித்தோப்பை சேர்ந்த சேகர் மகன் மணிகண்டன் (24), காந்தாரி மகன் கனகராஜ் (28) ஆகிய 4 பேரும் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீசார், ஆடுகளை மீட்டதோடு திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட 2 பைக்குகளை கைப்பற்றினர்.

Related Stories: