கோவில்பட்டி, பிப். 19: கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி ஆர்டிஓ அலுவலகத்தில் ரத்த தான கழகத்தினரும், பொதுமக்களும் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். கோவில்பட்டியில் செயல்படும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவர்களின் வேலை நேரத்தை உறுதிப்படுத்த வேண்டும். அல்ட்ரா ஸ்கேன் எடுக்கும் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். மஞ்சள்காமாலை, வலிப்பு உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கான மருந்து, மாத்திரை தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும்.மருத்துவமனை வளாகத்தில் தரமான சிமென்ட் சாலை அமைக்க வேண்டும். நரம்பியல் மருத்துவர், இருதய சிகிச்சை மருத்துவர்களை உடனடியாக நியமிக்க வேண்டும். குடும்ப கட்டுப்பாடு, பொது அறுவை சிகிச்சைகளை தாமதமின்றி மேற்கொண்ட கூடுதலாக மயக்க மருத்துவர்களை நியமிக்க வேண்டும். கூடுதலாக செவிலியர்களை நியமிக்க வேண்டும். மருத்துவமனையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்யவும், மருத்துவமனையில் உள்ள மருத்துவ கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்தவும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் அனைத்து ரத்த தானம் கழகம் சார்பில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.