திருவண்ணாமலை, பிப்.19: திருவண்ணாமலையில் நேற்று மத்திய, மாநில அரசுகளை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மத்திய, மாநில அரசுகளை கண்டித்து திருவண்ணாமலையில் நேற்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பேரணியாக சென்றனர். மாவட்ட தலைவர் சுந்தர் தலைமை தாங்கினார். செயலாளர் அன்பரசன், பொருளாளர் சரவணன் முன்னிலை வகித்தனர். மாநில துணைச்செயலாளர் மா.நந்தன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.அண்ணா நுழைவு வாயிலில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த, இந்த பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இருப்பினும், திட்டமிட்டபடி பேரணி நடத்த திரண்டனர். இதனால் போலீசார் குவிக்கப்பட்டனர். இதையடுத்து, அண்ணா நுைழவு வாயிலில் இருந்து தென்றல் நகர் பஸ் நிலையம் வரை மட்டுமே போலீசார் பேரணிக்கு அனுமதித்தனர். பின்னர் பேரணி தடுத்து நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஊழல் மையமாக மாறியுள்ள டிஎன்பிஎஸ்சி முறைகேடுகளை விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். மேலும், மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.