வேலூர், பிப்.19: வேலூர் மாநகராட்சியில் எலக்ட்ரானிக் குப்பைகளை விற்க சென்னை தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். வேலூர் மாநகராட்சியில் தினமும் 200டன் குப்பைகள் வரையில் சேகரிக்கப்படுகிறது. இந்த குப்பைகளில் மக்கும், மக்காத குப்பைகள் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தரம் பிரிக்கப்படுகிறது. இதில் மக்கும் குப்பகைளை உரமாகவும், மக்காத பிளாஸ்டிக் போன்றவற்றை சிமென்ட் கம்பெனிகளுக்கு பயன்படுத்த அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் மாநகர் பகுதிகளில் அதிகளவில் எலக்ட்ரானிக் பொருட்கள் சேர்ந்துவிடுவதால், தனியாக எலக்ட்ரானிக் பொருட்களை சேகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த எலக்ட்ரானிக் கழிவுகள் விற்பனை செய்ய சென்னை தனியார் நிறுவனத்துடன் 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. எலக்ட்ரானிக் குப்பைகள் சேர்ந்தவுடன், மாநகராட்சி மூலம் தனியார் நிறுவனத்திற்கு அன்றைய விலைக்கு விற்பனை செய்து விடுவார்கள் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.