×

இந்து முன்னணி நிர்வாகி காருக்கு தீ வைத்த விவகாரம் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை

திருப்பூர், பிப். 19:   திருப்பூரில் இந்து முன்னணி நிர்வாகி காருக்கு தீ வைத்த விவகாரம் தொடர்பாக ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி பின்னர் விடுவித்தனர்.  திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியில் மோகனசுந்தரம் என்பவரின் வீடு உள்ளது. இவர் இந்து முன்னணியின் கோட்டப் பொறுப்பாளராக உள்ளார். இவர் தினமும் வீட்டின் முன்பு காரை நிறுத்துவது வழக்கம். கடந்த 12ம் தேதி அதிகாலை வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காருக்கு இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் தீ வைத்துவிட்டு சென்றனர். அந்த கார் முழுவதும் எரிந்து சேதமானது. தீவைப்பு சம்பவத்தை கண்டித்து இந்து முன்னணியினர் திருப்பூர் முழுவதும் கடைகளை அடைத்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மாநகர பகுதியில் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது. காருக்கு தீ வைத்தவர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து போலீசார் சோதனை நடத்தினர். அப்போது தீ வைப்பதற்கு சிறிது நேரம் முன்பு அந்த பகுதியில் நடந்து சென்ற சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் நேற்று பிடித்து விசாரணை செய்தனர்.  இதில் அவர் அப்பகுதிக்கு டீ குடிப்பதற்காக நடத்து சென்றதும், நடந்த தீ வைப்பு சம்பவத்திற்கும் அவருக்கும் எந்த தொடர்வும் இல்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் விடுவித்தனர். தொடர்ந்து தீவைப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்களை தேடி வருகின்றனர்.

Tags : Front Administrator ,
× RELATED அமைச்சர் முன்னிலையில் பாஜவினர் 100 பேர்...