தேவதானப்பட்டி, பிப். 18: தேவதானப்பட்டி புறவழிச்சாலையில் வைகை அணை பிரிவில் மின்விளக்கு பழுதால் இரவு நேரங்களில் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல்லிருந்து குமுளி செல்லும் தேசிய நெடுஞ்சாலை தேவதானப்பட்டியில் ஊருக்குள் செல்லாமல் புறவழியாக செல்கிறது. இந்த சாலையின் குறுக்கே, தேவதானப்பட்டி-வருசநாடு மாநில நெடுஞ்சாலை தெற்கு நோக்கி செல்கிறது. இந்த இரண்டு சாலையும் சந்திக்கும் இடத்தில் உள்ள மின்விளக்கு பழுதடைந்துள்ளது.
இதனால், இரவு நேரங்களில் விபத்து ஏற்படுகிறது. இந்நிலையில், வத்தலக்குண்டில் இருந்து சில்வார்பட்டி, ஜெயமங்கலம் செல்லும் வாகனங்கள், புறவழிச்சாலையில், வழி தெரியாமல் வைகை அணைப் பிரிவை கடந்து சென்று விடுகின்றனர். ஒரு சில நேரங்களில் பின்னால் வரும் வாகனங்களால் விபத்து ஏற்பட்டு வருகிறது. கடந்த வாரம் இரவு வத்தலக்குண்டில் இருந்து கம்பம் சென்ற வேனும், ஆண்டிபட்டியில் இருந்து வத்தலக்குண்டு சென்ற சரக்கு வேனும் இந்த பிரிவில் மோதி விபத்து ஏற்பட்டது. எனவே, தேவதானப்பட்டி புறவழிச்சாலை வைகை அணைப் பிரிவில் உள்ள பெரிய மின்விளக்கை சீரமைத்து, ஒளிரும் பெரிய பெயர்ப் பலகையை வைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கூறுகின்றனர்.