போனஸ் வழங்காததை கண்டித்து சுமைப்பணி தொழிலாளர்கள் போராட்டத்தால் பரபரப்பு தென் மாவட்ட லாரிகளில் மூட்டைகள் தேக்கம்

திருமங்கலம், பிப்.18: கப்பலூரில் அமைந்துள்ள நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் மூட்டைகளை இறக்கி ஏற்றும் சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகை முடிந்து நான்கு மாதங்களாகியும் போனஸ் வழங்காததை கண்டித்து நேற்று பணி புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை திருமங்கலம் அருகேயுள்ள கப்பலூர் மற்றும் கூத்தியார்குண்டு ஆகிய இரண்டு இடங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்குகள் உளன. மதுரை மாவட்டம் மற்றும் பக்கத்து மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் விளையும் நெல்மூட்டைகளை கொள்முதல் செய்து இந்த திறந்தவெளி கிடங்கில் இருப்பு வைப்பது வழக்கம். இங்கிருந்துதான் தென் மாவட்ட ரேஷன்க டைகளுக்கு தேவையான அரிசிகளை அரைவை மில்லில் அரைத்து அனுப்பப்படுகிறது. இந்த இரண்டு திறந்தவெளி கிடங்குகளிலும் 300க்கும் மேற்பட்ட சுமைதூக்கும் தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். வருடத்தில் 8 மாதத்தில் இந்த தொழிலாளர்களுக்கு இந்த கிடங்குகளில் பணி இருக்கும். வெளி மாவட்டங்களிலிருந்து லாரிகளில் வரும் மூட்டைகளை இங்கு இறக்கி வைப்பது ஏற்றி அனுப்புவது இவர்கள் தான்.

இந்த நிலையில் கப்பலூர் திறந்தவெளி கிடங்கில் பணிபுரியும் 200க்கும் மேற்பட்ட சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு கடந்த தீபாவளி போனஸ் ரூ.3000 இதுவரை வழங்கப்படவில்லை. இதுகுறித்து தொழிலாளர்கள் பலமுறை புகார் தெரிவித்தும் டிஎன்சிசி அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சுமைதூக்கும் தொழிலாளர்கள் நேற்று காலை முதல் மூட்டைகளை இறக்கி வைக்கும் பணிகளை புறக்கணித்து திறந்தவெளி கிடங்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் தென்மாவட்டங்களில் பல்வேறு இடங்களிலிருந்து வந்த லாரிகளில் உள்ள நெல்மூட்டைகள் இறக்கி வைக்கப்படாமல் லாரிகளுடன் குடோனைச் சுற்றி நின்று வருகின்றன.

இதுகுறித்து சுமைதூக்கும் தொழிலாளர் கருணாநிதி கூறுகையில்,`` கடந்தாண்டு தீபாவளிக்கு வழங்கப்பட வேண்டிய போனஸ் இதுவரை வழங்கப்படவில்லை. மூட்டைகளை இறக்கி ஏற்றும் போது லாரியில் விழுந்து தவறி கீழேவிழுந்து காயங்கள் ஏற்பட்டால் கூட முதலுதவி சிகிச்சை செய்ய இங்கு மையம் இல்லை. குடிநீர் இல்லை. வியர்வையில் குளிக்கும் தொழிலாளர்களுக்கு குளிக்க தண்ணீர் வசதி கூட அதிகாரிகள் குடோனில் செய்து தரப்படவில்லை. இது போன்ற அடிப்படை பிரச்னைகள் மற்றும் தீபாவளி போனசை வழங்ககோரி இன்று (நேற்று) பணிகளை புறக்கணித்து போராட்டம் துவக்கியுள்ளோம்’’ என்றார்.இதுகுறித்து நுகர்பொருள் வாணிபகிடங்கு அலுவலகத்தில் கேட்ட போது, ``தீபாவளி போனஸ் இந்தாண்டு முதல் தொழிலாளர்களின் வங்கி கணக்கில் ஏற்றப்படும் என அறிவிக்கப்பட்டதால் ஏற்பட்ட நடைமுறை சிக்கலால் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. நாளைக்குள் (இன்று) தொழிலாளர்களின் கணக்கில் பணம் ஏற்றப்பட்டு விடும்’’ என்றனர்.

Related Stories: