தூத்துக்குடி. பிப். 18: தூத்துக்குடி சிலோன்காலனியில் குடியிருந்து வருவோர் பெயருக்கே வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து தூத்துக்குடி சிலோன் காலனி ஊர்த் தலைவர் செல்வராஜ், முன்னாள் மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர் சந்திரபோஸ் தலைமையில் பெண்கள் உள்ளிட்டோர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். மனு விவரம்: தூத்துக்குடி சிலோன் காலனியில் 146 குடும்பத்தினரான நாங்கள் சுமார் 40 ஆண்டுகளாக குடியிருந்து வருகிறோம். குடிசைகளில் வாழ்ந்து வந்த ஏழை மக்களான எங்களுக்கு கடந்த 2008ம் ஆண்டு தமிழக அரசால் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டு, 2013ம் ஆண்டு எங்களின் 10 சதவீத பங்களிப்புடன் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளன. நாங்கள் குடியிருந்து வரும் வீடுகளுக்கு இன்னும் பட்டா வரவே இல்லை. இதனால் நாங்கள் வீடுகளுக்கான வரியை குடிசைமாற்று வாரியத்தின் பெயரிலேயே கட்ட வேண்டி இருக்கிறது. இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டால் சப்-கலெக்டரை கைகாட்டுகின்றனர். அங்குசென்று பலமுறை மனு கொடுத்தும் எந்தப்பலனும் இல்லை. எனவே, எங்களது வீடுகளுக்கு பட்டாவை எங்கள் பெயரிலேயே வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.