×

காவேரிப்பட்டணம் அருகே பரபரப்பு தவறான சிகிச்சையால் தொழிலாளி திடீர் சாவு

கிருஷ்ணகிரி, பிப்.18: காவேரிப்பட்டணம் அருகே தவறான சிகிச்சை அளித்ததால் தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து, பிளஸ்2 படித்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே பாரதிபுரம் பட்டாலப்பள்ளியைச் சேர்ந்தவர் ராமன்(46). பிளஸ் 2 படித்துள்ள இவர், காவேரிப்பட்டணம் அருகே உள்ள மோரனஅள்ளியில் கடந்த 2 ஆண்டுகளாக வாடகைக்கு அறை எடுத்து தங்கி, அங்குள்ள மக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஜெயவேல்(40) என்பவருக்கு உடல்நலம் சரியில்லை என கூறி, அவரது மனைவி முனியம்மாள், ராமனிடம் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, ராமன் ஜெயவேலுவுக்கு கை நரம்பில் ஊசி போட்டுள்ளார். ஊசி போட்ட சிறிது நேரத்தில், ஜெயவேல் மயங்கி விழுந்துள்ளார். இதை பார்த்து பதறிப்போன முனியம்மாள், கணவரை காரில் ஏற்றிக்கொண்டு, காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்த டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு, ஏற்கனவே ஜெயவேல் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவேரிப்பட்டணம் போலீசார், விரைந்து சென்று ஜெயவேலின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், முனியம்மாள் கொடுத்த புகாரின்பேரில், போலி டாக்டர் ராமனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவேரிப்பட்டணம் அருகே போலி டாக்டர் சிகிச்சை அளித்ததில், தொழிலாளி இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : death ,Kaveripatnam ,
× RELATED கிராம தலைவரை ஓட ஓட துரத்தி பெட்ரோல்...