மாசிநாயக்கன்பட்டியில் பழுதடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

அயோத்தியாப்பட்டணம், பிப்.18: மாசிநாயக்கன்பட்டி டீச்சர்ஸ் காலனியில் பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அயோத்தியாப்பட்டணம்  அருகே உள்ள மாசிநாயக்கன்பட்டி டீச்சர்ஸ் காலனியில் நூற்றுக்கணக்கான வீடுகள், வர்த்தக கடைகள் உள்ளன. இங்குள்ள சாலை போதிய பரமரிப்பு இல்லாததால் பழுதடைந்துள்ளது. பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்வோர் இந்த சாலையை தினமும்  பயன்படுத்தி வருகின்றனர். வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்குகின்றனர். ஆட்டோ, கார், வேன் மற்றும் லாரி போன்றவை சாலையில் செல்ல முடியாமல், நீண்ட தூரம் சென்று  சுற்றி வருகின்றனர். இந்த சாலையை சீரமைக்கக்கோரி பல முறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, டீச்சர்ஸ் காலனியில் சாலை மற்றும் சாக்கடை கால்வாயை புதுப்பித்து தரவேண்டும். மின் விளக்குகளை பழுது நீக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: