விழுப்புரம், பிப். 18: விழுப்புரம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாரை எஸ்பி பாராட்டி பரிசு, சான்றிதழ் வழங்கினார். விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டை காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், புதுச்சேரியிலிருந்து கடத்திவரப்பட்ட மதுபாட்டில், காரை பறிமுதல் செய்து குற்றவாளிகளை கைது செய்த எஸ்ஐ இளங்கோவன் தலைமையிலான போலீசாருக்கும், விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மதுபாட்டில், காரை பறிமுதல் செய்த எஸ்ஐ பாலமுருகன் தலைமையிலான போலீசாரின் பணியை பாராட்டி எஸ்பி ஜெயக்குமார் சான்றிதழ், ஊக்கப்பரிசுகளை வழங்கினார். அதேபோல், விழுப்புரம் நகரகாவல்நிலையத்திற்கு உட்பட்ட ரயில்வே குடியிருப்பில் பெண் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த சிறுவனை கைது செய்த சிறப்பு எஸ்ஐ பாண்டியன், ஏட்டுகள் மணிமாறன், பாலமுருகன், சிவஜோதி, குமரகுரு மற்றும் திருவெண்ணெய்நல்லூர் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா, சாராயத்தை பறிமுதல் செய்து கைது நடவடிக்கை மேற்கொண்ட எஸ்ஐ அன்பழகன், தனிப்பிரிவு போலீசார் அண்ணாமலை ஆகியோரையும், திருவாரூர் மாவட்ட பிரபல ரவுடியை விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் மடக்கி பிடித்த எஸ்ஐ மருதப்பன் தலைமையிலான போலீசார் பணியை பாராட்டி எஸ்பி ஜெயக்குமார் சான்றிதழ், ஊக்கப்பரிசு வழங்கினார். அப்போது கூடுதல் எஸ்பி சரவணக்குமார், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் உடனிருந்தனர்.