×

சிவன்மலை முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா நிறைவு

காங்கயம், பிப்.18:சிவன்மலை முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா நேற்று நிறைவு பெற்றது. காங்கயம் அடுத்துள்ள சிவன்மலையில் உள்ள சுப்பிரமணியசாமி கோயிலில்  தைப்பூசத் திருவிழா, கடந்த மாதம் 30ம் தேதி மலை அடிவாரத்தில் உள்ள வீரகாளியம்மன் கோயிலில் தேர்த்  திருவிழாவுடன் நிகழ்ச்சிகள் துவங்கியது.  2ம் தேதி மலைக் கோயில் சன்னதி முன் கொடி ஏற்றப்பட்டது. பின்னர் சாமி மலை அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலுக்கு எழுந்தருளினார். 7ம் தேதி மைசூர் பல்லக்கில் சுவாமி மலையை வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 8ம் தேதி துவங்கி, மலையைச் சுற்றி வலம் வந்து, 10ம் தேதி தேர் நிலை அடைந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். 13ம் தேதி அடிவாரத்தில் உள்ள கோயில் தெப்பக்குளத்தில் பரிவேட்டை தெப்ப உற்சவமும், 14ம் தேதி மகா தரிசனமும் நடைபெற்றது. இதனையொட்டி, அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகளில் முருகன், வள்ளி-தெய்வானை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

இந்த நிலையில், தைப்பூச நிறைவு நாளான நேற்று  மாலை 5 மணியளவில் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. மாலை 6 மணியளவில், 1000 தேங்காய்கள் உடைக்கப்பட்டு, மலை அடிவாரத்தில் இருந்த நஞ்சுண்டேஸ்வரர் கோயிலில் இருந்து சிவன்மலை முருகன் மலைக் கோயிலுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு திருவிழா கோடி இறக்குதல், பாலிகை நீர்த்துறை சேர்தலுடன் சிவன்மலை முருகன் கோயிலில் தைப்பூச விழா நிறைவு பெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயிலின் உதவி ஆணையர் எம்.கண்ணதாசன் மற்றும் கோயில் ஊழியர்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.

Tags : festival ,Lord Shiva Temple ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...