ஈரோடு, பிப். 18: ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தமிழக மக்கள் முன்னேற்ற கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது, குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன், பள்ளன், தேவேந்திர குலத்தான், வாதிரியார் என்ற 7 உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திர குலவேளாளர் என்று அரசாணை வெளியிட வேண்டும். இதை வலியுறுத்தி பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். தமிழக அரசு இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தி அரசுக்கு தெரியப்படுத்தி வருகிறோம். ஆனால் அரசு ஆய்வுக்குழு மட்டும் அமைத்து விட்டு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாகி விட்டது.
இதனால் எங்கள் கோரிக்கையை தீவிரப்படுத்தும் வகையில் கருப்புச்சட்டை அணிவது என முடிவெடுத்து கடந்த 100 நாட்களாக தமிழகம் முழுவதும் கருப்புச் சட்டை அணிந்து கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம். தமிழக அரசு கால தாமதம் இல்லாமல் நடவடிக்கை எடுத்து தேவேந்திர குல வேளாளர் என அரசாணை வெளியிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் மயில்துரையன், மாவட்ட பொருளாளர் ராமு, மாவட்ட இணைச் செயலாளர் குணா(எ)குணசேகரன் மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.