ஈரோடு, பிப். 18: ஈரோடு எஸ்பி அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வந்த ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் தற்காலிகமாக வாடகை கட்டிடத்திற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டது. ஈரோடு எஸ்பி அலுவலக வளாகத்தில் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் செயல்பட்டு வந்தது. இந்த போலீஸ் ஸ்டேஷன் கட்டிடம் பழமையானதால் இந்த கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், ஈரோடு மகளிர் போலீஸ் ஸ்டேஷன் தற்காலிகமாக ஈரோடு கள்ளுக்கடை மேடு முத்துக்குமாரசாமி வீதியில் வாடகை குடியிருப்புக்கு அலுவலகத்தினை இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்காக பழைய போலீஸ் ஸ்டேஷனில் இருந்த தொலைபேசி இணைப்புகள், வாக்கி டாக்கி, கம்ப்யூட்டர், சிசிடிவி கேமரா, ஆவணங்கள் போன்ற முக்கிய பொருட்களை கடந்த 3 நாட்களாக போலீசார் மூலமாகவே எடுத்து செல்லப்பட்டன. இந்நிலையில், நேற்று காலை முதல் ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் வாடகை கட்டிடத்தில் செயல்பட துவங்கியது. இதுகுறித்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி கூறுகையில், ‘‘மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இடம் மாற்றம் குறித்து எங்களது பழைய போலீஸ் ஸ்டேஷனில் உள்ள அறிவிப்பு பலகையில் தெரிவித்துள்ளோம். அதில், புதிய முகவரியை மக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளோம். விவரங்களுக்கு:0424-2267100 என்ற தொலைபேசி எண்ணையும் குறிப்பிட்டுள்ளோம்,’’ என்றார்.