வேலூர், பிப்.18:வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த வார்டு வரையறைக்கான ஆலோசனைக்கூட்டத்தில், பிடிஓ அலுவலகங்களில் நாளை மறுநாள் வார்டு வரையறை விவரங்களை வெளியிட வேண்டும் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வார்டு வரையறை தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் சண்முகசுந்தரம் கூட்டத்திற்கு தலைமை தாங்கி பேசியதாவது:ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கிராமப்புற பகுதிகளில் உள்ள வார்டுகளில் 1,200 வாக்காளர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். நகர்ப்புற வார்டுகளில் 1,600 வாக்காளர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். வரும் 20ம்தேதி அந்தந்த பிடிஓ அலுவலகங்களில் வார்டு வரையறை விவரங்களை வெளியிட்டு விளம்பரப்படுத்தப்பட வேண்டும்.22ம்தேதி முதல் வார்டு வரையறை தொடர்பாக பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறுவதற்கு கால அவகாசம் அளிக்கப்படுகிறது. 25ம்தேதி மனுக்கள் மீது என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பது குறித்து ஆலோசனைகளை அதிகாரிகள் வழங்க வேண்டும். இணைப்பு வார்டுகளுக்கு ஒரு வாக்குச்சாவடி தேர்வு செய்வதில், 2 வார்டுகளுக்கு மேல் இணைக்கக்கூடாது.