சென்னை: குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளை இருநிலைகளாக பிரிக்கும் அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சங்கம் சார்பில் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம், தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் ஆகியவை நடத்திய போட்டித் தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றது குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இத்தகைய முறைகேடுகள் தொடர்வது இந்த அமைப்புகள் மீதான நம்பிக்கையை இழக்க செய்துள்ளது. முறைகேடுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தி முறைகேட்டில் ஈடுபட்ட அனைவரையும் கடுமையாக தண்டிப்பதில் தமிழக அரசு முழுமையாக தோல்வியை அடைந்துள்ளது.