×

கடன் பிரச்னையால் வெள்ளிப்பட்டறை அதிபர் தீக்குளித்து தற்கொலை

சேலம், பிப்.17:  சேலத்தில் கடன் பிரச்னையால் விரக்தி அடைந்த வெள்ளி பட்டறை அதிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். சேலம் செவ்வாய்பேட்டை கன்னார தெருவை சேர்ந்தவர் விக்ரமன்(36). இவர் வெள்ளி பட்டறை நடத்தி வந்தார்.  வீட்டில் கீழ் தளத்தில் வெள்ளிப்பட்டறையும், மேல் பகுதியில் விக்ரமனின் பெற்றோரும் வசித்து வருகின்றனர். விக்ரமன் தனது மனைவியுடன் அருகில் தனியாக வசித்து வந்தார்.   இந்நிலையில் நேற்று முன்தினம், விக்ரமன் பட்டறையில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, திடீரென அவரது கடையில் அலறல் சத்தம் கேட்டது. இதனை கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து பார்த்த போது, விக்ரமன் உடலில் தீப்பற்றி அலறி துடித்துக்கொண்டிருந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள் தீயை அணைத்து, அவரை சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி, நேற்று காலை விக்ரமன் உயிரிழந்தார். இதுகுறித்து செவ்வாய்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், விக்ரமனுக்கு அதிக கடன் தொல்லை இருந்ததாலும், திருமணமாகி 11 வருடமாகியும்  குழந்தைகள் இல்லாததாலும் விரக்தி அடைந்து, தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : suicide ,
× RELATED இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை