தேன்கனிக்கோட்டை, பிப்.17: அஞ்செட்டி மாரியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் மாதேஷ்(26). விவசாயியான இவர், கடந்த 10ம் தேதி தேன்கனிக்கோட்டை மார்க்கெட்டிற்கு பூக்களை விற்பனைக்காக எடுத்துக் கொண்டு தனது டூவீலரில் வந்திருந்தார். பஸ்நிலையம் அருகே தனியார் மருத்துவமனை பகுதியில் டூவீலரை நிறுத்தி விட்டு வியாபாரத்திற்கு சென்றவர், திரும்பி வந்து பார்த்த போது வண்டி காணாததை கண்டு திடுக்கிட்டார். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதன்பேரில், எஸ்ஐ நாகராஜ் வழக்குப்பதிந்து விசாரித்தார்.
மேலும், பஸ் நிலையம் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில், எல்லையூர் கிராமத்தைச் சேர்ந்த முகமது கலீல் மகன் ரிஸ்வான்(23), மல்லசந்திரம் கிராமத்தைச் சேர்ந்த முனியப்பா மகன் நாகராஜ்(20) ஆகியோர் டூவீலரை திருடிச் செல்வது பதிவாகி இருந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார் சிறையிலடைத்தனர். மேலும், அவர்கள் பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டியது தெரிய வந்துள்ளது. இதுகுறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.