×

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க விருதுநகர் வரும் முதல்வருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தகவல்

சிவகாசி, பிப்.17: பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மார்ச் 1ம் தேதி விருதுநகருக்கு வரும் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமிக்கு ஒரு லட்சம் பேரை திரட்டி பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்கப்படும் என்று பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.
விருதுநகரில் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டு விழா, விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டைக்கு புதிய கூட்டு குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டு விழா, சிவகாசி, வெம்பக்கோட்டை, சாத்தூர் ஆகிய ஒன்றிய கிராமங்கள் பயன்பெறும் வகையில் கூட்டு குடிநீர் திட்டம் தொடக்க விழா உட்பட பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மார்ச் மாதம் 1ம் தேதி விருதுநகர் வருகிறார்.
அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுப்பதற்கான ஆலோசனை கூட்டம் சிவகாசியில் நடைபெற்றது.

மாவட்ட அவைத்தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன், திருவில்லிபுத்தூர் எம்எல்ஏ சந்திரபிரபா முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசுகையில்,`` தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மார்ச் 1ம் மதியம் 3 மணியளவில் விருதுநகரில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளை தொடங்கி வைக்கிறார். விருதுநகருக்கு வருகை தரும் நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக கொண்டாட வேண்டும். இதற்கு நிர்வாகிகள் ஒரு லட்சம் பேரை திரட்டும் பணிகளை செய்ய வேண்டும். மேலும் ஜெயலலிதாவின் பிறந்தநாள் 24ம் தேதி மிகச் சிறப்பாக கொண்டாட வேண்டும். மாவட்டம் முழுவதிலும் ஏழை, எளிய மக்களுக்கு கட்சி நிர்வாகிகள் நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும்’’ என்று பேசினார்.

Tags : Rajendra Balaji ,events ,Chief Minister ,Virudhunagar ,
× RELATED மக்களவை தேர்தல்: ஐஸ் தயாரிப்பு முதல்...