3 ஆண்டுகளாக நிறுத்தி வைத்திருக்கும் நேரடி தபால்காரர்கள் தேர்வை உடனடியாக நடத்த வேண்டும்

மதுரை, பிப். 17: 3 ஆண்டுகளாக நிறுத்தி வைத்திருக்கும் நேரடி தபால்காரர்கள் தேர்வை உடனடியாக நடத்த வேண்டும் என மதுரையில் நடந்த ஊழியர்களின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தேசிய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் மதுரை கோட்ட ஊழியர்களின் செயற்குழு கூட்டம் அரசரடி தலைமை அஞ்சலகத்தில் நடந்தது. கோட்டச்செயலாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். கூட்டத்தில், கடந்த 3 ஆண்டுகளாக நடைபெறாமல் உள்ள நேரடி தபால்காரர் தேர்வை உடனடியாக நடத்த வேண்டும். ஊழியர்களுக்கு பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படுவதை போன்று,

குறைந்தபட்சம் 6 ஆண்டுகள் பணிக்காலம் முடிந்த தபால்காரர்களுக்கும் பணிமூப்பு அடிப்படையில் உயர் பதவி வழங்க வேண்டும். தபால்காரர்கள் மற்றும் எம்டிஎஸ் சீருடை படியை ரூ.10 ஆயிரமாக உயர்த்துவதை நிதி அமைச்சகம் நிராகரித்து இருந்தாலும், மீண்டும் அஞ்சல்துறை அதனை தக்க காரணங்களுடன் வலியுறுத்தி தபால்காரர் மற்றும் ஊழியர்களுக்கு சீருடைப்படி ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் என்பதை ரூ.10 ஆயிரமாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தபால்காரர் மற்றும் எம்டிஎஸ் ஊழியர்களுக்கு கேடர் மறுசீராய்வு அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: