கொங்கணாபுரத்தில் ஆடு விற்பனை ஜோர் ₹3.5 கோடிக்கு வர்த்தகம்

இடைப்பாடி, பிப்.17:  கொங்கணாபுரத்தில் ஆடுகள் விற்பனை களைகட்டியது. நேற்று ₹3.5 கோடிக்கு வர்த்தகம் நடந்தது.

சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே கொங்கணாபுரத்தில் நேற்று சனிசந்தை கூடியது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 5,800 ஆடுகள், 700 பந்தய சேவல், 2,000 சேவல், கோழிகள், 107 டன் காய்கறிகள் விற்பனைக்கு வந்தது. இதில் 10 கிலோ எடையுள்ள ஆடு ₹5,400, முதல் 6000க்கும், 20 கிலோ எடையுள்ள ஆடு ₹10,400 முதல் 11,500 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. வளர்ப்பு குட்டி ஆடு ₹1,200 முதல் 1,700 வரை விலை போனது. பந்தய சேவல்களை மோதவிட்டு அதன் திறனை பொருத்து ₹700 முதல் 2,800 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. இதனை வெளியூர் வியாபாரிகள் அதிகளவில் வாங்கி சென்றனர்.

கோழிகள் ₹100 முதல் 900 வரை விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், தக்காளி 27 கிலோ கொண்ட பெட்டி ₹150 முதல் 200, சின்னவெங்காயம் கிலோ ₹25 முதல் 35 வரையும், பெரிய வெங்காயம் ₹20 முதல் 35, கேரட் ₹30 முதல் 40க்கும், பீட்ரூட் ₹25 முதல் 30க்கும், பீன்ஸ் ₹20 முதல் 30க்கும், உருளைகிழங்கு ₹25 முதல் 30க்கும், முள்ளங்கி ₹10, முட்டைகோஸ் ₹15 முதல் 20க்கும், கத்தரிக்காய் ₹30 முதல் 40, இஞ்சி ₹60 முதல் 80க்கும், மிளகாய் ₹25க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனை வாங்க ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகாலை முதலே சந்தைக்கு வந்ததால் கூட்டம் அலைமோதியது. நேற்று கூடிய சந்தையின் மொத்த வர்த்தகம் ₹3.5 கோடியை தாண்டியது என விவசாயிகள் தெரிவித்தனர்.

Related Stories: