திருச்சி, பிப்.17: திருச்சியில் கல்லூரி மாணவர்களிடம் துப்பாக்கியை காட்டி செல்போன்களை பறித்து சென்றது தீவிரவாதிகளாக இருக்கக்கூடும் என்ற அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரளா மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த முகமதுஅபுபக்கர்(23), சர்கான்(22), உஸ்மான்(21), ரகபர்சாதிக்(22), வயநாடு பகுதியை சேர்ந்த வினிபர்ஜமால்(23). இவர்கள் 5 பேரும் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வருகின்றனர். இதில் அபுபக்கர் மட்டும் மன்னார்புரம் நியூ காலனி அருகே தனியாக அறை எடுத்து தங்கி உள்ளார். மற்றவர்கள் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். 5 பேரும் நண்பர்கள். கடந்த 13ம் தேதி முகமதுஅபுபக்கருக்கு சொந்தமான காரில் நண்பர்கள் 5 பேரும் வெளியில் சென்றுவிட்டு மன்னார்புரம் சுற்றுலா மாளிகை பகுதியிலுள்ள பழைய ஹவுசிங் போர்டு அருகே நள்ளிரவில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது 2 கார்களில் வந்த 10 பேர் கொண்ட மர்ம கும்பல், அபுபக்கர் வைத்திருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான செல்போன் மற்றும் இன்னொருவர் வைத்திருந்த ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் ஆகியவற்றை பறித்தனர். இதனை எதிர்த்து கேட்டபோது மர்ம கும்பலில் இருந்த ஒருவர் கைத்துப்பாக்கியை எடுத்து சுட்டுவிடுவதாக மிரட்டிவி–்ட்டு கார்களில் தப்பிச்சென்றனர். இந்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.